ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால் 8 கோடி ரூபா அபுதாபி வங்கிக்கு மாற்றம் : தயாசிறி ஜயசேகர


 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சென்னை கிளையினால் மேற்கொள்ளப்பட்ட நிதிப் பரிமாற்றத்தின்போது, 8 கோடி ரூபாவுக்கும் அதிகளவிலான பணம் தவறான வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

துபாயில் உள்ள முகவர் நிறுவனம் ஒன்றுக்கு செலுத்தவேண்டிய மாதாந்த கொடுப்பனவே இவ்வாறு தவறுதலாக வேறொரு வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செலுத்தப்படவேண்டிய வங்கி: எமிரேட்ஸ் என்.பி.டி வங்கிக் கணக்கு.

தவறுதலாக செலுத்தப்பட்ட வங்கி: அபுதாபி இஸ்லாமிய வங்கிக் கணக்கு.

இவ்வாறு தவறான கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ள தொகை 974,500 டிராம் ஆகும். இது இலங்கை நாணய மதிப்பில் 8 கோடி ரூபாவுக்கும் (80 மில்லியன்) அதிகமான தொகையாகும்.

வேறொரு வங்கிக் கணக்குக்குச் சென்ற இந்தப் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதன் காரணமாக, தற்போது பெரியதொரு நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அரசாங்கம் இதில் உடனடியாக தலையிட்டு இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மையை கண்டறியவேண்டும் என தயாசிறி ஜயசேகர மேலும் வலியுறுத்தியுள்ளார்.