இன்றைய வானிலை!


நாட்டிற்கு வடகிழக்கே நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தம் நீடித்து வருவதால் அதன் நடத்தை, வளர்ச்சி மற்றும் அதன் பாதை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது.

இதனால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது சில தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம்; கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமும் மழை நிலைமையும் தொடர்ந்து நீடிக்கும். கடற்படையினரும் மீனவச் சமூகத்தினரும் இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அறிவித்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பிராந்தியகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வரை காணப்படும். காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.