கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் : கடற்படையினருக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அவசர எச்சரிக்கை!


நாட்டுக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமும் மழைவீழ்ச்சியும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்படையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடற்பிராந்தியங்களில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வரை வீசக்கூடும்.

காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இதன் காரணமாக, காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்கள் ஓரளவுக்கு கொந்தளிப்பாக காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், குறித்த கடற்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அப்போது கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.