உற்பத்திச் செலவு அதிகரிப்பு : முட்டைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை


உற்பத்திச் செலவு சடுதியாக அதிகரித்துள்ளதன் காரணமாக, முட்டை உற்பத்தியை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து வெளியிட்ட அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, தற்போதைய நிலவரப்படி முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு 32 ரூபாவாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், தற்சமயம் பண்ணைகளில் இருந்து முட்டை ஒன்று 27 முதல் 28 ரூபா வரையிலான மொத்த விலைக்கே கொள்வனவு செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்கள் தங்களது பண்ணைகளைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், முட்டை ஒன்றுக்கு 6 ரூபா வற் வரி வசூலிக்கப்படுவதாகவும், இவ்வாறு வரி விதிக்கப்படுவதும் இந்த உற்பத்தித் துறை வீழ்ச்சியடைவதற்கு ஒரு காரணியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, முட்டை உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக முட்டைக்கு குறைந்தபட்ச விலையொன்றை அரசு நிர்ணயிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மேலதிகமாக உள்ள முட்டை உற்பத்தியை 'சதொச' நிறுவனம் ஊடாகக் கொள்வனவு செய்து, முட்டை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

முட்டை உற்பத்தியில் இருந்து சிறு மற்றும் நடுத்தர அளவிலான பண்ணையாளர்கள் விலகினால், நாட்டில் மீண்டும் முட்டை தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது எனவும், அதன் பின்னர் முட்டைகளை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, தற்போது வெளிச்சந்தையில் முட்டை ஒன்றின் விலை 30 முதல் 35 ரூபா வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.