
இலங்கையில் நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை காலதாமதமின்றி உடனடியாக நடத்துவதற்கான உத்தியோகப்பூர்வ திகதியை ஜனாதிபதி இன்னும் 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அது மக்களின் அரசியல் உரிமைகளை பறிப்பது போன்ற செயலாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப செயலாளர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
கொழும்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நீண்டகாலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை காலதாமதமின்றி உடனடியாக நடத்த வேண்டும். இதன் மூலம் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை தற்போதைய சூழலில் முடக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு நேரடியாகக் கிடைக்க வேண்டிய அரசியல், கலாசார மற்றும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் அனைத்தும் முற்றாகத் தடைப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி இன்னும் 30 நாட்களுக்குள் மாகாண சபை தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ திகதியை அறிவிக்க வேண்டும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத ஒரு காலகட்டத்தில், இந்தியாவின் ஆலோசனையின் பேரில் ஒரு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய சூழலில் இந்த 13 ஆவது திருத்தம் என்பது நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. எனவே, தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகளுக்கு தீர்வாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே தற்போதைய பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய தூணாக காணப்படும் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவதன் மூலம், அரசாங்கம் தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேர்தல் கோரிக்கைகளுக்கு மத்தியில், அரசாங்கத்தின் மீது பாரிய நிதிசார் குற்றச்சாட்டுகளும் நாடாளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் மற்றும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசாங்கம் நேரடியாக நிதி பெற்றுள்ளது. இவ்வாறான பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து அரசாங்கம் எவ்வித நிதியையோ அல்லது உதவிகளையோ பெறவில்லை என்பதை ஜனாதிபதியும் அரசாங்கத் தரப்பும் நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் நீதித்துறை சார்ந்த விவகாரங்களின் வெளிப்படைத்தன்மை குறித்தும் தற்போது பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக ஒட்டுமொத்த நாட்டையும் பாதித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தொடர்புடைய விவகாரங்களில் முறையான வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என அவர் சாடினார். இந்த விசாரணைகளில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் அரசியல் தலையீடுகள் முற்றாகத் தவிர்க்கப்பட்டு, நாட்டின் சட்டத்தின் ஆட்சி முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றார்.





.jpg)

.jpeg)




