
இரத்தினபுரி - இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று தாக்கியதில், அதன் பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பெரஹராவிற்காக இரண்டு யானைகள் அழைத்து வரப்பட்டு விகாரைக்கு அருகில் கட்டப்பட்டிருந்தன. இன்று (22) காலை இந்த யானைகளில் ஒன்றிற்கு தண்ணீர் புகட்டுவதற்காக பாகனின் உதவியாளர் யானையை இறக்குவானை ஆற்றை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, திடீரென ஆவேசமடைந்த யானை உதவியாளரைத் தாக்கி, மிதித்துக் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உதவியாளரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அவரை மீட்க அந்த இடத்திற்கு விரைந்த யானைப் பாகனையும் யானை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதனால் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னர், யானை விகாரைக்கு அருகிலுள்ள வயல்வெளி ஒன்றிற்குள் சென்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். யானைக்கு மயக்க மருந்து செலுத்தி அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



.jpg)








