டொலர் பெறுமதி உயர்வால் நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கவில்லை - பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ


அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதானது, இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதைக் குறிக்கவில்லை. தவறான மற்றும் திசைதிருப்பும் பிரசாரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் ரூபாவின் வீழ்ச்சி குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தற்போதைய மாற்றம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிலைவரங்கள் உள்ளிட்ட உலகளாவிய வெளிப்புறக் காரணிகளுடன் தொடர்புடையதாகும். இதன் காரணமாகவே, குறிப்பாக இறக்குமதிகளுக்காக அமெரிக்க டொலருக்கான தேவை சந்தையில் அதிகரித்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது என்று கூறுவதாயின், அங்கு பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுதல், உற்பத்தித் துறைகள் முடங்குதல், தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தல் மற்றும் அரசாங்கத்தால் தனது செலவீனங்களுக்கான நிதியைத் திரட்ட முடியாமல் போதல் போன்ற மிகவும் பாரதூரமான சூழ்நிலைகள் காணப்பட வேண்டும். ஆனால், அத்தகைய எந்தவொரு மோசமான நிலையும் இன்று நாட்டில் இல்லை.

தற்போதைய சூழலில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம், சுற்றுலாத்துறை மூலமான வருவாய் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல் ஆகிய அனைத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனினும், சந்தையில் டொலருக்கான தேவை தற்காலிகமாக அதன் விநியோகத்தை விட அதிகரித்ததே அண்மைக்கால மாற்று வீத உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அண்மையில் கிடைக்கப்பெற்ற சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை வலுப்படுத்தியுள்ளதுடன், வெளிநாட்டுத் துறைசார் ஸ்திரத்தன்மைக்கும் பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.

டொலரின் பெறுமதி தற்காலிகமாக 350 ரூபாவைத் தாண்டிய போதிலும், மத்திய வங்கியின் கொள்கை ரீதியான தலையீடுகள் மற்றும் துரித நடவடிக்கைகள் காரணமாக அது மீண்டும் 330 ரூபா வரை குறைவடைந்தது. கடந்த சில நாட்களில் மீண்டும் ஒரு சிறிய உயர்வு காணப்பட்டாலும், சந்தை படிப்படியாக ஸ்திரத்தன்மையடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே, தற்போதைய சூழ்நிலையானது தற்காலிகமான ஒரு சந்தை ஒழுங்கமைப்பே தவிர, இது பொருளாதார வீழ்ச்சி அல்ல. பொதுமக்கள் யாரும் அச்சமடையவோ அல்லது வதந்திகளின் அடிப்படையில் அவசர முடிவுகளை எடுக்கவோ வேண்டாம்.