
காலி பகுதியில் சுமார் 3,000 போதை மாத்திரைகளுடன் மருந்தக ஊழியர் ஒருவர் காலி பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோத போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் வேட்டையின் போதே இந்த அடுக்கடி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த சந்தேகநபரிடமிருந்து ட்ரமடோல் மற்றும் பிரிகேப்ளின் உள்ளிட்ட நச்சுத்தன்மை வாய்ந்த 3,000 இற்கும் அதிகமான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றின் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 01 இலட்சத்து 25 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் மருந்தகம் ஒன்றில் ஊழியராகப் கடமையாற்றி வருபவர் எனப் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மருந்தகத்தில் இருந்து இம்மாத்திரைகள் கடத்தப்பட்டதா என்பது குறித்துப் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை இன்று (06) சனிக்கிழமை காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குப் பொலிஸார் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இப்போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புத் தொடர்பாகக் காலி பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












