நுரைச்சோலை தளுவ கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!


நுரைச்சோலை தளுவ கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று சனிக்கிழமை (6) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த துயரச் சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கடற்கரைக்கு சென்றிருந்த குடும்பத்தினரில் மூவர், எதிர்பாராத விதமாக கடலலைகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் தில்லையடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களும் ஒரு இளைஞரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலை குடும்பத்தினருடன் கடற்கரைக்கு சென்று கடற்கரையில் குதூகலித்துக்கொண்டிருந்த வேளையில் வீசிய பலத்த காற்றுடன் ஏற்பட்ட அலைகளில் சிக்கி அவர்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

பல போராட்டங்களுக்கு மத்தியில் இவர்களின் உடல்கள் கரைக்கு கொண்டுவரப்பட்ட வேளை இவர்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

விடுமுறையை சந்தோசமாக கழிக்க குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்ற நிலையில், சில நிமிடங்களில் மீள முடியாத சோகமாக மாறியிருப்பது உறவினர்களை மட்டுமன்றி முழு ஊரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம், கடற்கரைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது. குறிப்பாக பலத்த அலைகள் காணப்படும் பகுதிகளில் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்காமல், உயிர் பாதுகாப்பை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் எமக்கு உணர்த்துகிறது.