
வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் புதல்வன் உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நேற்று (02) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகில் வீதியால் பயணித்த இரு இளைஞர்கள் மீது சொகுசு கார் மோதியதில் இரு இளைஞர்களும், படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை விபத்துக்குள்ளான சொகுசு காரின் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் புதல்வனான அட்புதராஜா தர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்களின் உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இவ்விபத்து தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.




.jpg)




.jpg)


