பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை ; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வளிமண்டலவியல் திணைக்களம்


 பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (07) ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை (08) திங்கட்கிழமை முற்பகல் 10:30 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதனால், கடலில் பயணம் செய்வோரும் மற்றும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரும் வரை மேற்படி கடற்பரப்புகளில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, இந்த விசேட அனர்த்த நிலைமை குறித்துக் கரையோரப் பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தால் அடுத்தடுத்து வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அவசரக் கடல்சார் எச்சரிக்கைகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் நுகர்வோரும் பொதுமக்களும் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.