துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரிடமிருந்து இரு துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு



துபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், தற்போது தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர் மற்றும் பாரியளவான போதைப்பொருள் வர்த்தகர் என அறியப்படும் மாவத்த சாமரவிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கொழும்பு மாதம்பிட்டிய பொது மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 துப்பாக்கிகள் மற்றும் 07 தோட்டாக்கள் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

குற்றச்செயல்களில் ஈடுபட்டு நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக வெளிநாடு சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் டுபாயில் வைத்து மாவத்த சாமர அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மேற்படி சந்தேகநபர் சர்வதேச பொலிஸாரால் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கைக்கு அமைய கடந்த மே மாதம் 21 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

கொழும்பு முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மேற்படி சந்தேகநபரை மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் குற்றப் புலனாய்வு மற்றும் புலனாய்வுப் பகுப்பாய்வுப் பிரிவினர் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக, செவ்வாய்க்கிழமை (02) பிற்பகல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய தானியங்கி துப்பாக்கி, அத்துப்பாக்கிகளுக்கான 02 மெகசின்கள், 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் 04 மற்றும் 7.6 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் 3 ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் குற்றப் புலனாய்வு மற்றும் புலனாய்வுப் பகுப்பாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.