இலங்கையர்களின் உயிரியல் அடையாளத் தரவுகள் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றனவா? – புபுது ஜயகொட கவலை


இலங்கை மக்களின் உயிரியல் அடையாளத் தரவுகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்புக்கு தீர்மானகரமான தகவல்களை இந்திய நிறுவனமொன்றிடம் வழங்கும் நடவடிக்கை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட சுட்டிக்காட்டினார்.

நுகேகொடவில் அமைந்துள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமை (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் உரையாற்றுகையில்,

தற்போது இலங்கையின் தேசிய அடையாள அட்டைக்காக மக்களிடமிருந்து பெயர், முகவரி, பிறந்த திகதி, தொழில் உள்ளிட்ட அடிப்படை வாழ்க்கைத் தகவல்கள் மட்டுமே பெறப்படுகின்றன. ஆனால் 2012ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கல் என்ற போர்வையில் மக்களின் கைரேகைகள், கண் தொடர்பான தரவுகள், முகத்தின் அளவீடுகள், மரபணு தகவல்கள் உள்ளிட்ட மிகவும் தனிப்பட்ட உயிரியல் அடையாளத் தரவுகளை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை தயாரித்தது.

அதற்கமைய ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்துடன் இணைந்த மின்னணு தேசிய அடையாள அட்டைத் திட்ட அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இந்த தரவுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது.

பின்னர் 2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து இதற்கான சட்ட அடிப்படையை உருவாக்கியது. அந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு இந்தத் திட்டத்துடன் எந்தவித தொடர்பும் இருக்கவில்லை.

அதன் பின்னர் இந்தியா இந்தத் திட்டத்துக்கான செலவின் ஒரு பகுதியை உதவியாக வழங்குவதாக தெரிவித்து, அதற்குப் பதிலாக இந்த தரவுத்தளம் மற்றும் மென்பொருள் கட்டமைப்பை உருவாக்கும் ஒப்பந்தத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என கோரியது.

அதன்படி 2023ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க - ராஜபக்ஷ கூட்டாட்சி இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய வகையில் ஒப்பந்தக் கோரிக்கையை வெளியிட்டது. ஆனால் மக்களின் எதிர்ப்பின் காரணமாக அந்த ஒப்பந்தத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடிந்ததற்குக் காரணம், அதனை இலங்கை அரசாங்கமே அழைத்திருந்ததுதான்.

இதுவரை இந்தத் திட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நடவடிக்கை மேலும் வேகமடைந்தது.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது, இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டைத் திட்டத்துக்கான ஒப்பந்த அழைப்பை விடுக்கும் அதிகாரத்தையே இந்தியாவுக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இது இலங்கை மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் தேசிய பாதுகாப்பையும் காட்டிக்கொடுக்கும் செயலாகும். இதன் மூலம் இலங்கை மக்களின் உயிரியல் அடையாளத் தரவுகளை அணுகும் உரிமை இந்தியா தெரிவு செய்யும் நிறுவனத்துக்கே வழங்கப்படுகிறது. அந்த நிறுவனத்தை தெரிவு செய்யும் அதிகாரமும் இந்திய அரசாங்கத்திடமே உள்ளது. இலங்கைக்கு அதில் எந்த அதிகாரமும் இல்லை.

இந்திய அரசாங்கம் அழைத்த ஒப்பந்தத்துக்கான காலவரையறை 2026ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி நிறைவடைந்தது. தற்போது தகுதி பெற்ற ஐந்து நிறுவனங்களில் ஒன்றை இந்தியா தெரிவு செய்து முடித்துள்ளது.

இந்த ஐந்து நிறுவனங்களில் இரண்டு இந்திய அரச நிறுவனங்களாகும். அவை இந்திய பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களாகும். ஏனைய மூன்று நிறுவனங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் பொது நிதிகளை பயன்படுத்தி வளர்ந்த அவரது நெருக்கமான வர்த்தக வட்டாரங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களாகும்.

குறிப்பாக, மோடியின் நெருங்கிய நண்பரும், அவரது ஜனநாயக விரோத, விரிவாக்கவாத மற்றும் இந்துத்துவ அரசியல் செயற்பாடுகளின் முக்கிய ஆதரவாளருமான இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக இந்தியாவிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

எனவே இந்தத் திட்டத்துக்கு எதிராக மக்கள் உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.

இன்று பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்த பாரிய காட்டிக்கொடுப்பை முன்னெடுத்து வருகின்றன. இந்த ஆபத்தான நடவடிக்கையை தோற்கடிப்பதற்காக மக்கள் முன்னுக்கு வர வேண்டும் என்றார்.