நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மேலும் ஒரு அதிகாரி உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு



நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
இதற்கமைய, இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 6 ஆம் திகதி காலையில் இரண்டாவது தடவையாகவும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, சிறைச்சாலை விசேட உத்திகள் பிரிவின் 07 அதிகாரிகள் உயிரிழந்தனர். சிறைக்கைதிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்காகியே அவர்கள் உயிரிழந்தனர்.

இந்த மோதலில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஆபத்தான நிலையிலிருந்த 20 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதேவேளை, மோதலில் உயிரிழந்த 07 சிறைச்சாலை அதிகாரிகளினதும் உடலங்கள் இறுதி அஞ்சலிக்காக இன்று (08) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டன.

குறித்த அதிகாரிகளின் உறவினர்கள், நெருங்கியவர்கள் மற்றும் அவர்களுடன் கடமையாற்றிய சக அதிகாரிகளின் கண்ணீர் மற்றும் சோகத்திற்கு மத்தியில் உடலங்கள் கொண்டு வரப்பட்டன.

இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் உடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.