அனைத்து சமயங்களையும் கலாசாரங்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை:வஜிர அபேவர்தன தெரிவிப்பு


அரசியலமைப்பின் 27(11)ஆவது உறுப்புரை மீறப்படும் பட்சத்தில், அதனை திருத்தியமைப்பதற்காகவும் அதற்கு எதிராகவும் கூட்டு எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரோடு ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று (8) நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கூட்டு எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் இலங்கையில் உள்ள அனைத்து சமயத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றோம். அந்த வகையில் அனைத்து சமயத் தலைவர்களையும் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், இன்றைய தினமும் முஸ்லிம் சமயத் தலைவர்களை தெளிவுபடுத்துவதற்கும், அவர்களினால் முன்வைக்கப்படும் ஏனைய கருத்துக்களை கூட்டு எதிர்க்கட்சி என்ற ரீதியில் பெற்றுக்கொள்வதற்கும் நாம் எதிர்பார்த்திருந்தோம்.

அரசியலமைப்பின் 27(11)ஆவது உறுப்புரையின்படி, அனைத்து சமயங்களையும் பேணிப் பாதுகாப்பதற்கும், அச்சமயங்களின் கலாசாரங்களை பாதுகாப்பதற்கும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

எந்தவொரு ஆட்சியின் கீழும் அது நிறைவேற்றப்படாவிடின், அது ஒரு பாரதூரமான சோகமான நிலமையாகும் என நான் கருதுகின்றேன்.

பௌத்த மதத்தை மேம்படுத்துவது தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், ஏனைய அனைத்து சமயங்களையும் கலாசாரங்களையும் மேம்படுத்துவதும், அவற்றை வளர்ப்பதும் பாதுகாப்பதும் அரசியலமைப்பின் ஒரு உறுப்புரையாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த உறுப்புரை மீறப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுமாயின், அவற்றை திருத்தியமைப்பதற்காக கூட்டு எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் செயற்பட வேண்டும். இதற்காக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இதில் கலந்துகொண்டன.

இதன்போது கூட்டு எதிர்க்கட்சியின் கருத்துக்களும் சமயத் தலைவர்களின் கருத்துக்களும் மிகவும் வெற்றிகரமான முறையில் கலந்துரையாடப்பட்டன என்றார்.