
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதார அமைச்சும், தற்போதைய அரசாங்கமும் திணறி வருவதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான அரசியல் மற்றும் நிர்வாகத் தலைமைத்துவம் சுகாதார அமைச்சுக்கு இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசாங்கத் தரப்பினரும், மருத்துவ வல்லுநர்களும் இதுகுறித்து முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
புதிய வகை வைரஸ் பிறழ்வு காரணமாகவே டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என பிரதமரும், அமைச்சரவை உறுப்பினர்களும் கூறிவரும் நிலையில், புதிய வைரஸ் பிறழ்வு எதுவும் ஏற்படவில்லை என்றும், உள்ளூராட்சி மற்றும் மாநகர சபைகளின் பலவீனமான நிர்வாகம், முறையற்ற குப்பைக் கழிவகற்றல் மற்றும் கொசுக்கள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளதே உண்மையான காரணம் என மருத்துவ வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே, டெங்கு பரவலுக்கான உண்மையான காரணம் என்ன என்பதைப் பிரதமரும், சுகாதார அமைச்சு அதிகாரிகளும் இணைந்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், வழக்கம்போல அரசாங்கம் தன் மீதான தவறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது சுமத்தப் பார்க்கின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பே டெங்கு நோய் பெருந்தொற்றாக மாறக்கூடும் என எச்சரித்திருந்தும், அரசாங்கம் உலகளாவிய நவீன தொழில்நுட்பங்களையோ அல்லது முறையான கூட்டுத் திட்டங்களையோ பயன்படுத்தத் தவறிவிட்டது. இலங்கை மருத்துவ சங்கம் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போன்ற துறைசார் வல்லுநர்களை அழைத்து ஜனாதிபதியோ அல்லது சுகாதார அமைச்சரோ இதுவரையில் எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை.
குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, மகரகம, தெஹிவளை, கல்கிசை, மொரட்டுவை, கெஸ்பேவ மற்றும் கடுவெல போன்ற மாநகர சபை எல்லைகளில் நிலவும் பலவீனமான அரசியல் தலைமைத்துவம் மற்றும் துறைசார் அறிவின்மையே இந்நிலைக்குக் காரணம் ஆகும். இந்த அரசியல் விளையாட்டுகளால் இதுவரை 60,000க்கும் அதிகமான பொதுமக்கள் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு நெருக்கடிக்கு மத்தியிலும், சுகாதாரத் துறையில் வரலாறு காணாத வகையில் லிக்னோகெய்ன் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனியார் துறைகளில் மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தேவையான இரசாயன மூலப்பொருட்கள் இல்லாததால் ஒட்டுமொத்தப் பரிசோதனை நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. கடந்த காலங்களில் இத்தகைய அவசர நிலைகளின்போது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்களுக்கு அரசியல்வாதிகளின் தலையீடின்றி சுயாதீனமாகச் செயற்பட அதிகாரம் இருந்தது.
ஆனால், தற்போது அரசாங்கத்தின் அரசியல் தலையீடுகளால் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளதால், அரச நிர்வாகம் ஒருபுறமும், அரசாங்கம் மறுபுறமும் இயங்கும் நிலை உருவாகி, இறுதியில் பொதுமக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, ஜனாதிபதி உடனடியாகத் தலையிட்டு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து துறைசார் வல்லுநர்களை அழைத்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அடுத்த சில வாரங்களுக்குள் இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






.jpg)


.jpg)



