
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குழுக்களை நியமித்து, கீழ்நிலை ஊழியர் ஒருவர் மூலம் பழியைத் தீர்த்துவிட்டு அமைச்சர் தப்பிக்க முயன்றால், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு முன் இருந்த 76 ஆண்டு கால சாபம் தற்போது 78 ஆண்டு கால சாபமாக மாறியுள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை (8) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலை நெருக்கடி நிலைமையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் பார்க்க வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர், இந்த நாட்டுக்கு அதுவரை நிலவிய அரசியல் ஆட்சி ஊழல் நிறைந்தது என்றும், மக்களுக்கு பொறுப்புக்கூறாத நிர்வாகம் என்றும் அவர்கள் கூறினார்கள். மகர சிறைச்சாலை மோதல் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில், குழுக்களையோ அல்லது ஆணைக்குழுக்களையோ நியமிப்பது உண்மைகளை மூடிமறைக்கவே என்றும், அரசாங்கம் பொறுப்பேற்று பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், அதுவே உன்னதமான அரசியல் கலாசாரம் என்றும் அவர்கள் அன்று கூறினார்கள்.
விசாரணைக் குழுக்களை நியமித்து கீழ்நிலை அதிகாரிகள் மீது பழியைப் போட்டுவிட்டு அமைச்சர்கள் தங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வது பழைய அரசியல் கலாசாரமாகும். எனவே, தங்களின் முன்னால் இருப்பது அவர்கள் விமர்சித்த அதே 76 ஆண்டு கால அரசியல் கலாசாரம்தானா, அல்லது பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலகப் போகிறார்களா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்திலும் குழுக்களை நியமித்து, கீழ்நிலை ஊழியர் மூலம் பழியைத் தீர்த்துவிட்டு அமைச்சர் தப்பிக்க முயன்றால், அந்த 76 ஆண்டு சாபம் தற்போது 78 ஆண்டு சாபமாக மாறியுள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
சிறைச்சாலைகளில் காலை உணவு கொண்டு சென்றவர்கள் தொடர்பான உள்நாட்டு தகவல்கள் எனக்கு முழுமையாகத் தெரியாதுவிடினும், பொதுவாக நமது சிறைச்சாலைகளில் 12000 பேருக்கான வசதிகள் மட்டுமே உள்ள நிலையில் 43000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் 33000 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஆவர். தண்டனை பெற்ற கைதிகளுக்கான வசதிகள் மட்டுமே உள்ள சிறைச்சாலை கட்டமைப்பில், பெருமளவிலான விளக்கமறியல் கைதிகளை அடைத்து வைப்பதன் மூலம் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு எலிகள், கரையான்கள், அசுத்தமான நீர் மற்றும் தொற்றுநோய்கள் பரவி மிகவும் மோசமான சூழல் காணப்படுகிறது.
இத்தகைய சுகாதாரமற்ற சூழலில் நோய்கள் பரவுவது இயல்பானதாகும். கொரோனா காலத்தில் மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமையை நாம் கண்டோம். தற்போதைய நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் 40 க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. போதைப்பொருள் பாவனையாளர்கள் 2 குழுக்கள் மோதிக்கொண்டதால் மட்டும் ஒட்டுமொத்த சிறைச்சாலையும் கலவரமாக மாறாது. அங்கு நிலவும் டெங்கு நோய் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பிரச்சினைகளே இதற்கு காரணமாகும் என்றார்.






.jpg)


.jpg)



