அம்பாறை மற்றும் மட்டக்களப்பில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழைக்கு வாய்ப்பு


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
 
இதில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

அத்துடன், பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

காற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம், சிலாபம் வரையிலான கடற்பகுதிகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

குறிப்பிட்ட சில கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.