ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட பணத்தில் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களைக் கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விந்தனியே சூரியஆரச்சி எனும் 'பொட்டி' என்ற பெண்ணை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 14 வருட காலப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, 8.5 கோடி ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பாகவே இச்சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
சட்டவிரோதமாகப் பெறப்பட்ட, கொழும்புக்கு சமீபமாக அமைந்துள்ள 3 வீடுகள், 3 வர்த்தக நிலையங்கள் மற்றும் 6 வங்கிக் கணக்குகள் என்பன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தற்காலிகமாக பொறுப்பேற்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதனால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு நீதவான் நீதிமன்றம், சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.




.jpg)




.jpg)



.jpg)