பஸ் ஓட்டுநரைத் தாக்க முயன்ற சம்பவம் - பெண் உட்பட மூவர் விளக்கமறியலில்


திவுலப்பிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் ஒருவரை வாளால் தாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பெண் ஒருவர் உட்பட மூவரை ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திவுலப்பிட்டிய நகரில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றிற்கு பின்னால் வந்த கார் ஒன்று, திடீரென பேருந்து மறித்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்து இறங்கிய பெண் ஒருவரும் இரு ஆண்களும் வாளுடன் பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயன்றுள்ளனர்.

பேருந்தில் இருந்த பயணியொருவர் இச்சம்பவத்தை தனது கைப்பேசியில் காணொளி பதிவு செய்திருந்த நிலையில், அந்த காணொளி சமூக வலைதளங்களிலும் பரவியது.

அந்த காட்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த காரில் பயணித்த சந்தேகநபர்களை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் 18 வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.