எதிர்வரும் சனிக்கிழமைகளில் பணியில் ஈடுபடப்போவதில்லை : இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவிப்பு



எம்மால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியதன் காரணமாக நேற்று முதல் மறு அறிவித்தல் வரை சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நெவில் விஜேரத்ன தெரிவிக்கையில்,

பயணக் கொடுப்பனவை அதிகரித்தல், பட்டப்படிப்பை குறைந்தபட்ச தகுதியாக மாற்றுதல், கம்மன்பில குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குதல், சனிக்கிழமை மற்றும் அரச விடுமுறை நாட்களில் செய்யப்படும் சேவைக்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் கடந்த 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மருத்துவ சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும், குறித்த இரு நாள் தொழற்சங்க நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை மற்றும் கோரிக்கைகளுக்கு நேர்மறையான தீர்வினை வழங்கத் தவறியமை காரணமாக சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளோம்.

அதற்கமைய, எவ்வித கூடுதல் கொடுப்பனவுமின்றி எங்களது விடுமுறையை தியாகம் செய்து மேற்கொள்ளும் அந்த அலுவலக நாளை நாங்கள் தவிர்க்கிறோம்.

மேலும், அன்றைய தினம் நாங்கள் களப் பணிகளை மேற்கொள்ள மாட்டோம்.

அதன்படி, சனிக்கிழமை அலுவலக நாளை புறக்கணிக்கிறோம். அதற்கமைய, கிராம உத்தியோகத்தர்கள் இனிமேல் மறு அறிவித்தல் வரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே பிரிவு அலுவலகங்களில் தங்கியிருப்பார்கள் என்றார்.