மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்தின் பிரதான ஆலோசகர்களாக காணப்படுகின்ற நிலையில் இந்த அரசாங்கம் அவர்களின் ஆலோசனைகளையும் மதிக்கவில்லை - நாமல் ராஜபக்ஷ




நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையான முறையில் தீர்மானங்களை எடுக்கிறார்.நீதித்துறையை அரசியல்மயப்படுத்தினால் ஏற்படும் அபாயத்தையே ஜனாதிபதி எதிர்கொள்ள தயார் என்று குறிப்பிட்டுள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த தீர்மானத்தை கைவிடுமாறு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடுமையான வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ள பின்னணியில் அரசாங்கம் அதனை கருத்திற் கொள்ளவில்லை.

மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்தின் பிரதான ஆலோசகர்களாக காணப்படுகின்ற நிலையில் இந்த அரசாங்கம் அவர்களின் ஆலோசனைகளையும் மதிக்கவில்லை. 22 ஆவது திருத்தத்தை கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் புறக்கணித்துள்ளது.

நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையான முறையில் தீர்மானங்களை எடுக்கிறார்.நீதித்துறையை அரசியல்மயப்படுத்தினால் ஏற்படும் அபாயத்தையே ஜனாதிபதி எதிர்கொள்ள தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.

உரிய தரப்பினரது ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னரே 22 ஆம் திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிய அந்த சிரேஷ்ட தரப்பினர் யார் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும் என்றார்.