கோர விபத்தில் பாட்டியும் பேரனும் உயிரிழப்பு


வெயங்கொடை, மகலேகொட - நைவல வீதியில் வேன் ஒன்று மின்கம்பத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
 
இவ்வாறு உயிரிழந்தவர்கள் வேனின் சாரதியாக செயற்பட்ட வெயங்கொடை, ஹீந்தெனிய பகுதியைச் சேர்ந்த நவோத் சதுரங்க என்ற 21 வயதுடைய இளைஞரும், அவரது 80 வயதுடைய பாட்டியுமாவர்.

மூத்த சகோதரியின் திருமண விழா முடிந்து வெயங்கொடை, ஹீந்தெனிய பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

மணப்பெண்ணின் சகோதரர் வேனை ஓட்டிச் சென்றுள்ளதுடன், அதில் தாய், தந்தை மற்றும் பாட்டி உள்ளிட்ட 9 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர் வேனில் பயணித்த அனைவரும் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாரதியாகச் செயற்பட்ட சகோதரரும், பாட்டியும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், காயமடைந்த 7 பேர் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வெயங்கொடை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.