அரசாங்கம் அதிவேகப்பாதைகளை அமைப்பதுபோல், நாட்டின் ஜனநாயகத்தையும் அதிவேகமாக அழித்து வருகிறது – சஜித்


அரசாங்கம் அதிவேகப்பாதைகளை அமைப்பதுபோல், நாட்டின் ஜனநாயகத்தையும் அதிவேகமாக அழித்து வருகிறது. பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் நீதி அமைச்சரையும் நீதி அமைச்சின் செயலாளரையும் சந்திப்பதற்கு அனுமதி கோரியும் அதற்கு அனுமதி வழங்கப்படாததன் மூலம் நாட்டின் ஆட்சிமுறை ,ஜனநாயகம் குறித்து பாரதூரமான சந்தேகங்களை எழுப்புவதாக அமைந்து விடுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கட்டளைகள் மீீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சபாநாயகர் சபைக்கு 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை தொடர்பாக தவறான தகவலை சபையில் வெளியிட்டார். இதுதொடர்பில் தெளிவுபடுத்த சபாநாயகர் இடமளிக்கவில்லை. துலார குணதிலக்க, சாந்த ஜயதிலக்க உள்ளிட்டோரும் இதற்கு எதிராக மனுத் தாக்கல் செய்திருந்த போதிலும், திறந்த நீதிமன்றத்தில் அழைப்பு விடுக்கப்படாததால் அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மீறுவதற்காக அல்லாமல் அவற்றைப் பாதுகாப்பதற்காகவே அரசாங்கம் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டது. இக்கருத்தை முன்னதாக பாராளுமன்றத்தில் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படாமை கவலைக்குரியது.

இம்மனுக்களுக்கு செவிசாய்க்காமல் மனு நடைமுறை முழுமையடையாது. அதனை பூர்த்தி செய்தே 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான அபிப்பிராயத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக "அனைவரின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும்" என்ற கோட்பாட்டை பின்பற்ற வேண்டும்.

போக்குவரத்துத் துறையைப் பார்க்கும் போது பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதாக அரசாங்கம் கூறினாலும், இதற்கு நிதி தேவைப்படுகிறது. அதற்கு பொருளாதார வளர்ச்சி அதிகரித்து நாட்டிற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்க வேண்டும். நெடுஞ்சாலைகளை அமைப்பது போல், அரசாங்கம் அதிவேகமாக ஜனநாயகத்தையும் அழிக்கும் நிலைக்கு நாட்டைத் தள்ளிவிட்டுள்ளது. இது மிக வேகமாக நடந்து வருகின்றது. நமது நாட்டில் ஜனநாயகம் சுருங்குவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வரமாட்டார்கள். சுதந்திரமான நீதித்துறை, ஜனநாயகம் மற்றும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு இல்லையெனில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் வராது. அது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.

மேலும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு சர்வதேச நம்பிக்கை அவசியமாகும். அந்த நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீபன் திரூ இலங்கைக்கு வருகை தந்திருந்த போது, நீதி அமைச்சரையும் நீதி அமைச்சின் செயலாளரையும் சந்திப்பதற்கு அனுமதி கோரினார். அது வழங்கப்படவில்லை என ஸ்டீபன் திரூ தெரிவித்தார். அவர் என்னையும் சந்தித்தார். இத்தகைய பின்னணியில், சர்வதேச தொடர்புகளைக் கொண்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வரும்போது அவரை நீதி அமைச்சரால் சந்திக்க முடியாமல் போவது நாட்டின் ஆட்சிமுறை மற்றும் ஜனநாயகம் குறித்து பாரதூரமான சந்தேகங்களை எழுப்புகின்றன. இந்த அரசாங்கத்திற்கு பொதுலவாய நாடுகள் மற்றும் அதன் நடைமுறைகள் பற்றி எந்த அறிவும் இல்லை.

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பல தீவிரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஒருவர் தனது சொந்த வழக்குக்கு தானே அமர்ந்து ஆஜராக முடியாது என்பதால், 22 ஆவது திருத்தம் தொடர்பான வழக்குக்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அனைவரும் நியமிக்கப்பட வேண்டும். அந்த அமர்வு சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும். மேலும், பதிலளிக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. சில மனுக்களுக்கு செவிசாய்க்கக்கூட இல்லை

இவை நாட்டிற்கும், நீதிமன்றத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பொருத்தமானவைகளாக இல்லை. கௌரவ மிக்க நீதிமன்றத்திற்கு இழைக்கப்படும் இந்த அவமதிப்புகளை நாம் எதிர்க்கிறோம். இப்போது உலக அளவில் இதைப் பற்றி தவறான அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. நமது நீதித்துறை அமைப்பில் உள்ள அடிப்படைக் கோட்பாடுகளை நாம் பாதுகாக்க வேண்டும்.

அன்று 22 ஆவது திருத்தம் இல்லை என்று கூறிவிட்டு, பிற்பகலில் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வந்ததும் இந்த நீதி அமைச்சர் தான். முடிந்தால் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தை அங்கீகரிக்கப்போவதில்லை என அரசாங்கத்தால் பிரேரணை ஒன்றை கொண்டுவருமாறு சவால் விடுக்கிறேன். அப்போதுதான் உலகிற்கு சரியான செய்தி செல்லும்.

தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்த சமயம், சுகாதாரம் என்பது ஒரு அடிப்படை உரிமை என்றும், அந்த அடிப்படை உரிமையை பலப்படுத்த வேண்டும் என்றும் பிரஸ்தாபித்திருந்தார். மருத்துவமனையில் கட்டில் வழங்க முடியாவிட்டால் வழக்கு தொடரலாம் என்றும் கூறிய இந்த ஜனாதிபதி, இப்போது சுகாதாரத் துறையை மாற்றி, தமக்குத் தோன்றியபடி மருத்துவமனைக்குச் செல்ல முடியாது என்று கூறுகிறார். மருந்துகள், உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான மருந்துகளின் தட்டுப்பாடுகளே இதற்குக் காரணமாகும். எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியவற்றை இப்போது செயல்படுத்தி அதனை செயலில் காட்டுமாறு நான் இங்கு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் .

அதேநேரம் தற்போது 'அஸ்வெசும' நிவாரணம் துண்டிக்கப்படுவதைப் போல, நெல்லுக்கு தருவதாகக் கூறிய 150 ரூபாய் உத்தரவாத விலையும் இல்லை, இப்போது 17 ரூபாய் நஷ்டத்தில் 120 ரூபாய் உத்தரவாத விலையே வழங்கப்படுகின்றது. பொருட்கள் விலை கூடியுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி தற்போது பொய்யை பிரசாரம் செய்யும் பயணங்களை மேற்கொண்டு பொய்களைக் கூறி வருகின்றார். பொய்களைக் கூறிக்கொண்டு நாடு முழுவதும் செல்வதற்குப் பதிலாக, 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.