![]() |
ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று (06) கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.
சட்டத்தரணிகள் சங்கம், வைத்தியர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் அரசாங்கம் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தற்போதைய சூழலில் அரசியல் கட்சிகளுக்குக் கட்டுப்பாடுகளையும் இடையூறுகளையும் விதிப்பதுடன், எவ்வித காரணமும் இன்றி அரசியல்வாதிகளைக் கைது செய்து ஜனநாயகம், எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன தொழிற்சங்கங்களை அடக்கும் பிரசாரத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
"குறிப்பாக ஒரு கட்சியாக நாங்கள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்த்ததற்குக் காரணம், அதற்கு அரசாங்கம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு தேவை எனக் குறிப்பிடாதமையினாலேயே ஆகும். எனவே, அதன் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்த நீதிமன்றத்தின் ஊடாக நாங்கள் சர்வஜன வாக்கெடுப்பைக் கோரினோம்.
ஆனால் இன்று முன்னெடுக்கப்படும் திட்டங்களின் மூலம் பல்வேறு குழுக்கள் அரசியல் கட்சிகளுக்குக் கட்டுப்பாடுகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்துவதையும், அரசியல்வாதிகளை எவ்வித காரணமும் இன்றி கைது செய்வதையும் காண முடிகிறது. இவையனைத்தின் மூலமும் நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சியையும் இல்லாமல் ஆக்கவே பார்க்கிறார்கள். அதேபோல் சுயாதீன தொழிற்சங்கங்களையும் அழித்தொழிக்க முயல்கிறார்கள்.
இப்போது சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எதிராகத் தாக்குகிறார்கள், வைத்தியர்களுக்கு எதிராகத் தாக்குகிறார்கள். அதேபோன்று மற்றொரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது பௌத்த பிக்குகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரசாரமாகும். இவையனைத்தின் மூலமும் நாட்டின் அரசியலமைப்பும் மக்களின் இறையாண்மையையும் சீரழிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு பேசுவதற்கு இடம் வழங்குவதில்லை. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவை அழைத்த சந்தர்ப்பத்தில், அவரைப் பாராளுமன்றத்திற்குள் வர அனுமதிக்கவில்லை. இவ்வாறான செயற்பாடுகளே இடம்பெறுகின்றன.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்நாடு எங்கிருந்து ஆட்சி செய்யப்படுகிறது? பாராளுமன்றத்திலிருந்தா அல்லது பெலவத்தையிலிருந்தா? இவ்வாறான சிக்கல்கள் நிலவும் சந்தர்ப்பத்தில், மக்களின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்பின் 3ஆவது சரத்தைப் பாதுகாக்க வேண்டும், 9ஆவது சரத்தின்படி பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டும்.
நாம் அனைவரும் ஒன்றுபடுவோம், 1946ஆம் ஆண்டில் அனைவரும் ஒன்றுபட்டு சுதந்திர இலங்கையை உருவாக்கினோம். இன்றைக்கும் அனைவரும் ஒன்றாகச் செயற்பட்டு நாட்டின் இறையாண்மையை பாதுகாப்போம்" எனத் தெரிவித்தார்.


.jpg)



.jpg)



.jpg)


