சந்திவெளி வாவியிலிருந்து வயோதிப மீனவர் சடலமாக மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி வாவியிலிருந்து 66 வயதுடைய  ஆறுமுகம் சிதம்பரப்பிள்ளை எனும் முதியவரின் சடலம் நேற்றிரவு (26.08.2014) மீட்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவகர் பி. மேகலா தெரிவித்தார்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது@ சந்திவெளி, கண்ணகை அம்மன் கோயில் வீதி எனும் விலாசத்தில் வசித்து வந்த இவர் நேற்று செவ்வாய்க்கிழமை  ஆடு கட்டுவதற்காக களப்பின் மறுகரையிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்திற்குப் போவதாக வீட்டாரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.



அவரது மகன் இரவு ஏழு மணியளவில் அருகிலுள்ள சந்திவெளி களப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காகச் சென்றபோது தோணியொன்று அநாதராவாகக் களப்பில் கிடந்ததைக் கண்டு டோர்ச் லைற் மூலம் தேடிப் பார்த்துள்ளார்.

அப்போது தனது தந்தை களப்பில் உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு ஏனைய மீனவர்களுமாகச் சேர்ந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

தற்போது ஸ்தலத்திற்குச் சென்றுள்ள ஏறாவூர் பொலிஸாரும் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் ஆகியோர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.