பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒரு அராஜக செயலை நிகழ்த்தியுள்ளனர் !. பா.அரியநேந்திரன்

கொக்கட்டிச்சோலையில் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது அராஜகமான செயலாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா பனையறுப்பான் கிராமத்தில் செவ்வாயக்கிழமை இடம்பெற்ற சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இப்பகுதி மக்களை சந்தித்த பின்னர் கருத்து தெரிவித்த அவர்,

மது பாவனையை ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது. அதற்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த முடியாது. பொலிஸார் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பது தமது அராஜக செயலை நிகழ்த்தியுள்ளதை காட்டுகின்றது.

பொதுமக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களை காயப்படுத்தியமைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் பொலிஸாரை தாக்க முற்பட்டிருந்தால் பொலிஸார் துப்பாக்கியினால் சத்த வேட்டுக்களை தீர்த்து மக்களை கலைத்திருக்க முடியும்.

ஆனால், துப்பாக்கியினால் பொதுமக்களை சுட்டுள்ளனர். அதிலும் பெண்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
இது குறித்து பிரதேச மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். என அவர் மேலும் தெரிவித்தார்.