மட்டக்களப்பு மக்களை தனிமைப்படுத்த வேண்டும் : இல்லையேல் 2 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம்

கொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர் எனவே 14 நாட்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை மூடி தனிமைப்படுத்த வேண்டும் இல்லாவிடில் மட்டக்களப்பில் 5 இலட்சம் பொதுமக்களில் 2 இலச்சம் பொதுமக்கள் கொரோனாவினால் பாதிக்கப்படப்போவது உறுதி என மட்டு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியிடம் வைத்திய நிபுணர். எஸ். மதனழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று (25) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவியுமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட மட்டு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் எஸ் மதனழகன் இவ்வாறு தெரிவித்தார்

கொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர் ஏப்பிரல் மாதம் காலநிலை மாறும்போது பிரச்சனை பெரிதாகும் வாய்ப்புள்ளது. எனவே 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இல்லாமல் நெருக்கமாக இருந்தால் ஒட்டு மொத்தமாக மட்டகள்ளப்பில் 45 தொடக்கம் 75 வீதமான மக்கள் பாதிப்படையலாம்ஃ

குறைந்த பட்சம் 40 வீதம் கொரோனா தொற்றுக்கு இந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் 5 இலட்சம் பொதுமக்கள் வாழுகின்ற இந்த மட்டகள்ளப்பு மாவட்டத்தில் 2 இலட்சம் பொது மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்படுவார்கள்.

இதை தடுக்கமால் போனால் 40 ஆயிரம் பேருக்கு வைத்தியசாலையிலை விடுதி வசதி தேவைப்படும், தற்போதைய நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆயிரம் கட்டில் மட்டுமே உள்ளன. இதனை 2 ஆயிரம் கட்டிலாக மற்றுமே மேற்படுத்த முடியும்.

இந்த 40 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு நாங்கள் அவசரசிகிச்சை ஒட்சிசன் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் வரலாம், ஆனால் தற்போதைய நிலையில் மட்டு மாவட்டத்தில் 55 பேருக்கு தான் அவசர சிகிச்சை ஒட்சிசன் வழங்க முடியும்.

இதன் தீவிரம் இதிகரிக்குமாக இருந்தால் அது எந்தளவுக்கு இருக்க போகின்றது என ஆராயாமல் பொது இடங்களில் மக்கள் கூடுதல் அனுமதிக்கப்பட்டால் இந்த தொடர் சங்கிலி தொற்று நோயை நிறுத்தமுடியாமல் போகும்.

இந்த 6 மணித்தியால ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி பொதுமக்களை பொருட்கள் கொள்வனவு செய்ய அனுமதிப்பது கூட இந்த பாதிப்பை கொண்டுவரப் போகின்றது. அதேவேளை நீங்கள் முககவசம் அணிவதே கையுறை போடுவதோ எதுவுமே 100 வீதம் இந்த தொற்றை கட்டுப்படுத்த போவதில்லை இது பாதிப்பை கொண்டுவரப் போகின்றது.

எனவே முடியுமாயின் வீட்டுக்கு வீடு பொருட்களை கொண்டு சென்று வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் அதற்கு ஒரு குழுவை நியமிக்கவும் இந்த மாவட்டத்தை ஒரு 14 நாட்கள் மூடமுடியுமாக இருந்தால் அது இந்த வைரஸ்ஸை தடுக்க ஒரு நல்ல செயலாக இருக்கும். இந்த தொற்று ஆரம்பித்தால் தொற்று சங்கிலியை நிறத்த முடியாமல் போகும்.

நாடளாவிய ரீதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 பேராக காணப்பட்ட போதும் அது 20 ஆயிரம் பேர் வரை தொற்றி இருக்கும் வாய்ப்புள்ளது என கணிப்பிடப்பட்டுள்ளது ஆனால் நிச்சயமாக அதைவிட கூடுதலாகத்தான் இருக்கும்.

முககவசம் மற்றும் துணியை பயன்படுத்தும் போது அதில் மூக்கில் வருகின்ற ஈரப்பதன் படிந்ததும் அதில் வைரஸ் படியும். எனவே இந்த நிலையில் வெளிப்பக்கம் தண்ணீரை உறுஞ்சாததும் உட்பக்கம் எமது ஈரத்தை உறுஞ்சும் பொருத்தமானான தரமான முககவசங்களை பயன்படுத்தவேண்டும்.

எனவே அறிவுறுத்தல்களுக்கு அமைய முககவசம் கையுறை போன்றவைகளை அணிந்து கொண்டு சென்றால் வைரஸ் தொற்றாது என்ற எண்ணத்தை விடுத்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தால் தான் இந்த தொற்றை தடுக்கமுடியும் என்றார் .