மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை 30 கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 48 மணித்தியாலங்களுக்கு மேலாக பெய்து கொண்டிருக்கும் தொடர் மழைகாரணமாகவும் உறுகாமக் குளம் பெருக்கெடுத்துள்ளதால் வான்கதவுகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது இதனால் சுமார் 30கிராமங்களை சேர்ந்த மக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மட்டக்களப்பு திருகோணமலை வீதி, ஈரளக்குளம் வீதி, வேப்பவெட்டுவான் வீதி, மயிலவெட்டுவான் வீதி போன்றவற்றின் ஊடான போக்குவரத்துக்களும் முற்றாகப்பாதிக்கப்பட்டுள்ளன.
கடைசியாக இன்று(22.12.2014) காலை 11மணியளவில் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் படி சுமார் 30 கிராமங்களில் உள்ள 12542 குடும்பங்களைச் சேர்ந்த 45277 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான பராமரிப்பு பணிகளை செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.