தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஊசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழப்பு !


தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் ஊசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17 ஆவது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு இவருக்கு Cefuroxime என்ற தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்தியருமான குமார விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் தடுப்பூசியைச் செலுத்தியதால் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என விசாரணைகளின் பின்னர் கண்டறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், உயிரிழந்த நபருக்குச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் தடுப்பூசியானது ஏற்கனவே மருத்துவ பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.