
மட்டக்களப்பு, மாவட்டத்தில் பிரதேசம் ஒன்றில் தனது 7 மற்றும் 8 வயது மகள்களை 2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 4 குற்றத்துக்கு 40 ஆயிரம் தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
56 வயதுடைய தந்தையார் உள நலம் பாதிக்கப்பட்ட மகள் உட்பட 7 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களையும் கடந்த 2016 அக்டோபர் மாதம் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த நபருக்கு எதிராக 16 வயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி இனம் காணப்பட்டார்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது, 8 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவும் இரண்டாவது குற்றத்துக்காக 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்குமாறு உத்தரவிட்டார்.
அடுத்து பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாவும், நான்காவது குற்றத்துக்காக 10 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குமாறும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை சமகாலத்தில் வழங்கப்பட வேண்டும் என நீதிபதி கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.