தூங்கிக்கொண்டிருந்த கணவனை அவருடைய மனைவி கோடாரியால் தாக்கிய சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் வீதி 19 ஆம் கட்டை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு குழந்தைகளின் தந்தையான 43 வயதுடைய குடும்பஸ்தர் திங்கட்கிழமை (22) அன்று இரவு 9 மணியளவில் வீடு திரும்பி, தூங்கிக்கொண்டிருந்துள்ளார். இந்த சம்பவம், செவ்வாய்க்கிழமை (23) காலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேறொரு பெண்ணுடன் கணவர் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த கணவன் சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேக நபரான நாற்பது வயதுடைய பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்