திருகோணமலை புத்தர் சிலை - நவம்பர் 26 அன்று நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ




திருகோணமலையில் விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது பொலிஸார் தரப்பில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால், அது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (18) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

புத்தர் சிலையொன்று சேதப்படுத்தப்படுமானால் அது வன்முறையை ஏற்படுத்தக்கூடும் என்பதை அனைவரும் அறிவார்கள்.

அதற்கு இடமளிக்க வேண்டாம்... அதற்கு பெட்ரோல் ஊற்றிப் பற்றவைக்க வேண்டாம், என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறித்த சம்பவத்தின்போது பொலிஸார் தேரர்களுக்குத் தாக்குதல் நடத்தியது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் ஒரு விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

"பொலிஸார் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காகவே இருக்கின்றனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டும் நாட்டில் சட்டம் மீறப்படும் வகையிலோ அல்லது சமாதானம் சீர்குலையும் வகையிலோ செயற்பட பொலிஸார் இடமளிக்க மாட்டார்கள்.

இந்த சம்பவத்தில் குறித்த இடத்தில் தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையொன்றை நிர்மாணிக்க செல்ல சில காலம், சில கட்டுப்பாடு மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குறித்த கட்டுப்பாடுகளை மீறியமை தொடர்பில் அந்த கட்டடத்தை இடிப்பதற்கான உத்தரவொன்றும் உள்ள நிலையிலேயே அங்கு புத்தர் சிலையொன்றும் கொண்டுவரப்பட்டது.

அடுத்த வழக்கு விசாரணை நவம்பர் 26 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. பொலிஸார் சமர்ப்பித்த விடயங்களின்படி, அனைத்து சாட்சியங்களையும் பதிவு செய்யுமாறும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மையைத் தெளிவுபடுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2025.11.26 வரை எந்தவிதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அந்த பகுதியின் அமைதியைப் பாதுகாக்க பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது தேரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதைப் பயன்படுத்தித் தமது அரசியல் பயணத்தை அமைத்துக்கொள்ள, கூட்டங்களுக்கு ஆட்களைச் சேர்க்க, பேருந்துகளைப் போட்டு ஆட்களைக் கூட்ட எதிர்பார்பவர்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

இது போன்ற சம்பவங்களில் இருந்து ஆரம்பித்து, பாரிய இரத்தக்களரி வரை நாடு என்ற வகையில் நாம் பல சம்பவங்களை எதிர்கொண்டுள்ளோம்.

அதனாலேயே புத்தர் சிலையை அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

மீண்டும் புத்தர் சிலை அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26 அன்று நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படும் என வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.