மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரதான போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது !



மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3 வியாபாரிகளை சனிக்கிழமை (15) இரவு கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 7 ஆயிரம் மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை  அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் ஊழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் நகரிலுள்ள அம்மன் கோவில் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்டனர்.

இதன் போது ஹோட்டல் அறையில் தங்கியிருந்த கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான வியாபாரியான முறக்கொட்டாஞ்சேனை காளி கோவில் வீதியைச் சேர்ந்த தனுஷன் என்பவரை 3200 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் அவருடன் இருந்த இன்னொரு வியாபாரியான சித்தாண்டி 2ம் பிரிவைச் சேர்ந்த விதுஷன் என்பவரை 1300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சித்தாண்டி பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சித்தாண்டி 2ம் பிரிவைச் சேர்ந்த போதை வியாபாரியான சதீஸ்வரன் என்பவரை 2500 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேரையும் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.