இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், உயிரியல் பாடத்தை எழுதிய 21 மாணவர்களின் முதலாம் பகுதிக்கான (பல்தேர்வு வினா) விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ளன.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. நெல்லியடியின் பிரபல பாடசாலையொன்றில் உள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் உயிரியல் பாடத்தின் பல்தேர்வு வினாப் பரீட்சை நடத்தப்பட்டது.
21 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி, முறைப்படி விடைத்தாள்களைக் கையளித்துள்ளனர்.
இந்த விடைத்தாள்கள் அன்றைய தினமே உரிய பாதுகாப்புகளுடன் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், பரீட்சை நிலையத்தில் கடமையாற்றியவர்களின் கவனக்குறைவு காரணமாக, அவை உடனடியாக அனுப்பப்படவில்லை.
மூன்று நாட்களின் பின்னர் சென்று பார்த்தபோதே, காகிதாதிகளுடன் சேர்த்து அவை கட்டப்பட்டு, அனுப்பப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
தவறு நிகழ்ந்ததால், தற்போது அந்த விடைத்தாள்களை திருத்தல் பணிகளுக்காக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையில், குறிப்பாக உயிரியல் போன்ற பாடங்களில், ஒரு சில புள்ளிகள் கூட மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிலையில், தொடர்புடைய 21 மாணவர்களும் பெருமளவில் புள்ளிகளை இழக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது அவர்களின் இத்தனை ஆண்டுகால கல்வி வாழ்க்கையையும் அர்த்தமற்றதாக மாற்றியுள்ளதுடன், மாணவர்களை உச்சக்கட்ட மன அழுத்தத்துக்குள்ளும் தள்ளியுள்ளது.
இந்த விடயம் கல்வித் திணைக்களங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட உடனேயே, அந்தப் பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றியவர்கள் அங்கிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கவனக்குறைவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக திணைக்கள ரீதியான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




.jpg)







