வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் A/L மாணவர்களுக்கு படகுச் சேவை



காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் சிரமத்திற்குள்ளாகியுள்ள உயர்தரப் பரீட்சை மாணவர்களைப் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக்கா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இவ்விரு மாவட்டங்களிலும் சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்துச் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்கு வசதியாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தும்போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.