உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – ரோஹித்த அபேகுணவர்த்தன !


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பான அனைத்து தகவல்களும் இருப்பதாகவும் விரைவாக கண்டுபிடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்கிறுதியளித்திருந்தது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் கடந்தும் மக்களுக்கு அளித்த அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறி இருக்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு , பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்து, சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்திருந்தது. அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து ஒருவருடம் கடந்துள்ளது.

அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி எங்கே என கேட்கிறோம். தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பான தகவல்கள் இருப்பதாக தெரிவித்தீர்கள். ஏன் இன்னும் சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டும் வரை கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை எதிர்பார்த்திருக்கிறார்.

நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம். யார் எப்படி இதனை திட்டமிட்டு மேற்கொண்டிருந்தாலும், அது தேசிய குற்றமாகும்.இந்த குற்றத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு சட்டம் நிலைநாட்டப்படாவிட்டாலும் கடவுளின் சாபம் கிடைக்கும்.

என்றாலும் அரசாங்கம் தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளித்த பிரகாரம், உங்களமு தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுதப்பட்டுள்ளதன் பிரகாரம் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துங்கள். அப்போது அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பதாக மக்கள் தெரிவிக்கும்.

பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்த தடையும் இல்லை. ஏனெனில் நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை, உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் என அனைத்தும் உங்களிடம் இருக்கின்றன.

எனவே தொடர்ந்தும் இந்த விடயத்தை பிற்படுத்தாமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிிரதான சூத்திரதாரியை கைதுசெய்து, நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், இந்த பிரச்சினையும் வெறும் பேசுபொருளாக மாத்திரமே இருந்துவரும்.

பட்டலந்த வதைமுகாம் தொடர்பில் பாராளுடன்றத்தில் இடம்பெற்ற விவாதம் தற்போது கைவிடப்பட்டுள்ளதைப்போன்று. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்வதும் பாராளுமன்ற விவாதத்துடன் நின்றுவிடாமல் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றார்.