இலங்கையர் தினத்திற்காக ஒதுக்கியுள்ள நிதி குறித்து எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை



அரசாங்கம் .இலங்கையர் தினத்திற்காக ஒதுக்கியுள்ள 3000 இலட்சம் ரூபாவை காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பயன்படுத்து வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு , பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஊனமுற்ற இராணுவ வீரர்கள் இன்று பிரதான 3 பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவில், பொது நிர்வாக சுற்றறிக்கை 15/2025 மூலம் சகல அரச மற்றும் ஆயுதமேந்திய படை அதிகாரிகளின் ஓய்வூதியங்களை திருத்துவதற்கு முன்மொழியப்பட்டன.

ஓய்வூதிய சுற்றறிக்கை இலக்கம் 2/2025, ஊடாக ஆயுதமேந்திய முப்படைகளின் பொலிஸார் மற்றும் விசேட அதிரடைப் படையில் பணியாற்றுவோர் ஓய்வு பெற்ற பிறகும் 55 வயது வரை, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறும் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு, இறந்த அதிகாரியின் விதவைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்காது என சுற்றறிக்கை அனுப்பி வைத்து, பின்னர் அதனை திருத்தம் செய்துள்ளனர்.

வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஓய்வூதிய திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அது செல்லுபடியற்றது என்று அறிவித்து உத்தரவுகளை பிறப்பிக்கிறார். ஜனாதிபதியின் முன்மொழிவை பணிப்பாளர் நாயகம் எவ்வாறு நிராகரிக்க முடியும் ?

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் நிலையான கொடுப்பனவுகளைக் கூட அரசாங்கம் குறைத்துள்ளது. இதுபோன்ற அநீதிகளை இழைக்க வேண்டாம். சுனாமி, விமான விபத்துகள் போன்றவற்றால் காணாமல் போன பாதுகாப்புப் படையினருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருந்தாலும், ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் இவற்றை இரத்துச் செய்துள்ளார்.

அவர்கள் திரும்பி வருவார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் நிலையான கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளார். பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியையும் விஞ்சி செயற்பட்டுள்ளார். இது நாட்டின் கொள்கைக்கு முரணாக உள்ளது.

போதைப்பொருள் வியாபாரம் ஒழிக்கப்படும் என்று பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நடவடிக்கைகளை பாரபட்சமின்றி முன்னெடுக்க வேண்டும். இதனை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும்

போதைப்பொருள் வியாபாரம் போலவே, இனையவழி கடன் மாபியாவும் மிக மோசமாக அதிகரித்து, நாட்டில் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வந்துள்ளது. சட்டவிரோத கடன் வழங்கும் செயல்முறை குறித்து இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறோம்.

ஆனால் இதற்கு தெளிவான தீர்வு எதுவும் இல்லை. இதன் காரணமாக, அண்மையில் அத்தனகல்லை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மெகா கேஷ் என்ற நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட கடன் காரணமாகவே இந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிறுவனத்தில் இருந்து, இந்த இளம் பெண் பெற்ற கடனுக்கு வட்டி, நூற்றுக்கு 500 வீதமாக காணப்பட்டுள்ளது. இவ்வாறு கடன் பெறுவதற்கு வறுமை அதிகரிப்பே காரணம்.

மெகாபின் லங்கா, வன் கெரடிட், ஆசாத் டெவலப்மென்ட், சூப்பர்மேன் போன்ற பல நிறுவனங்கள் நாடு முழுவதும் பரவி காணப்படுகின்றன. இந்த சட்டவிரோத நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும். இந்த சட்டவிரோத நிறுவனங்கள் மத்திய வங்கி கடிதம் போன்று போலியான கடிதங்களை எழுதி கடன் பெறுநர்களை மிரட்டி வருகின்றன.

தவணைத் தொகை ஒரு நாள் தாமதமானால் கூட கடன் பெறுநர்களின் வேலை தளங்களுக்குச் சென்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்த சட்டவிரோத நிறுவனங்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றுவதற்குத் தேவையான முழு ஆதரவையும் பெற்றுத் தருவோம்

மேலும் டிசம்பர் 11, 12 மற்றும் 13 ஆகிய திகதிகள் இலங்கையர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்குள் ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான வழிமுறைகளை பெற்றுக் கொடுப்பது இதன் நோக்கமாக காணப்படுகின்றன. இதற்காக 3000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்து.

மேலும் இந்த 3000 இலட்சத்தை செலவிட 7 நாள் விலைமனு செயல்முறையும் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கையர் தினத்திற்காக ஒதுக்கப்பட்ட 3000 இலட்சம் ரூபாவை காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பயன்படுத்துங்கள். நல்லிணக்க திட்டத்திற்கான நிதிசார் பக்க பலத்தை பெற்றுக் கொடுக்குமாறு இதனைப் பயன்படுத்துங்கள். சகவாழ்வு பற்றிப் பேசும் அரசு, இந்த 3000 இலட்சத்தை வீணாக்காமல், நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த, நல்லிணக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும் என்றார்.