ஊடக சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் கோழைத்தனமான ஆட்சியை உடன் நிறுத்துங்கள் - சஜித் பிரேமதாச



ஆளுந்தரப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது ஊடக சுதந்திரம், ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து, நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்தனர். ஆனால் இன்று உண்மை செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்படுகின்றனர். அரசாங்கத்தின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்ததைத் தொடர்ந்து திங்கட்கிழமை (24) விசேட அறிவிப்பை விடுத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது இதற்கு முன் இல்லாத ஒரு நிலைமை உருவாகியுள்ளது. பொலிஸ் தடையகற்றல் சான்றிதழைப் பெறுவதற்கு, கிராம உத்தியோகத்தரின் சான்றுப் பத்திரத்திற்குப் மேலதிகமாக திசைகாட்டி உறுப்பினர்களைக் கொண்டமைந்நு காணப்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்களினது பரிந்துரைச் சான்றிதழும் தேவைப்படுகின்றன. இது தொடர்பாக கடந்த பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி சாட்சி ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்தாலும் அரசாங்கம் அதனை மறுத்தது.

இது தொடர்பாக ஊடக நிறுவனங்கள் பல்வேறு சாட்சிகள் ஆதாரங்களுடன் இச்சம்பவங்களை மேலும் வெளிப்படுத்தி வரும்வேளையில், குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களை இன்றளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அரசாங்கம் வரவழைத்துள்ளது. கடந்த பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி இரண்டு உதாரணங்களையே முன்வைத்தாலும், இன்னும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. முழு நாட்டுக்கும் தெரிந்த விடயமாகும். ஜே.வி.பி தலைவர்கள் கட்சியின் ஆசீர்வாதத்துடன் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கட்சி வர்க்க வேறுபாடின்றி, சிவில் சமூகத்தின் சகல உறுப்பினர்களும் சிவில் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட்டாலும், இன்று ஜே.வி.பி இந்த மரபை மீறியுள்ளது. நாட்டில் அரசியலமைப்புச்சார் எதோச்சதிகாரத்தை ஸ்தாபிக்க, தனிக் கட்சி மட்டுமே முழு நாட்டையும் ஆளும் ஆட்சி முறைமையை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இளைஞர் கழகங்களின் பதவி நிலைகள் ஊடாகவும் இந்த சர்வாதிகார ஆட்சியை பலப்படுத்த இவர்கள் பிரயத்தனப்பட்டு வருகின்றனர்.

ஆளுந்தரப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது ஊடக சுதந்திரம், ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து, நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்தனர். ஆனால் இன்று, நாட்டில் ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்து, அரசியலமைப்புச்சார் எதோச்சதிகாரத்தை ஸ்தாபிக்க முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்துச் செல்லும் வெட்கக்கேடான கோழைத்தனமான நடவடிக்கைகளை நிறுத்துங்கள்.

ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க எதிர்க்கட்சியில் இருந்த போது தெரிவித்தவற்றை இன்று நடைமுறைப்படுத்துங்கள். ஊடகவியலாளர்களை அடக்குமுறைக்குட்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள். ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்றார்.