புலிக்கொடியை அங்கீகரித்தது கனடாவின் பிரம்டன் நகரம்



கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேயர் பற்றிக் பிரவுண் அங்கீரித்து வழங்கியுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் புலிக்கொடி தினத்தை நினைவுகூருகின்றனர்.

இந்த நாள் ஈழத்தமிழ் தேசத்தின்கூட்டு அடையாளத்தையும் 1930 களில் இருந்து தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான அவர்களின் தொடர்ச்சியான எதிர்பார்ப்பையும் குறிக்கின்றது.

உலகளாவிய தமிழர் உரிமைகளின் குரல் என்பது தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிக்காக வாதிடுவதற்கும், தமிழ் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், காப்பகப்படுத்துவதற்கும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மேம்படுத்துவதற்குமானதொரு அமைப்பாகும்.

இந்நாளில், புலிக்கொடி சம்பிரதாயமாக ஏற்றப்படுவதோடு இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை மதிக்கும் வகையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. அதே நேரத்தில் தமிழ் வரலாறு கலாசாரம் அடையாளம் குறித்த உரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கொடி தினத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுதல் மற்றும் ஈழத்தமிழர்கள், பிரம்டன் குடியிருப்பாளர்கள், பரந்த சமூகத்தினரிடையே பகிரப்பட்ட புரிதல், ஒற்றுமை உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.