கியுபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு புதிய வரிகள் - ட் ரம்ப் அச்சுறுத்தல் !



கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிற்கு எதிரான அழுத்தங்களை தீவிரப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, அத்தீவிற்கு எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (30) அச்சுறுத்தியுள்ளார்.

தேசிய அவசரகாலப் பிரகடனத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட நிறைவேற்று அதிகார உத்தரவின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, எவ்வித வரி வீதங்களையோ அல்லது எந்த நாடுகளின் பொருட்கள் அமெரிக்க வரிகளை எதிர்கொள்ளக்கூடும் என்ற விபரங்களையோ பெயரிட்டு குறிப்பிடவில்லை.

இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற கடுமையான தாக்குதல் நடவடிக்கை ஒன்றின் போது, பதவி நீக்கம் செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க இராணுவம் கைப்பற்றிய சம்பவத்தினால் உத்வேகம் அடைந்துள்ள டிரம்ப், கியூபாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் அதன் தலைமைத்துவத்திற்கு அழுத்தம் கொடுப்பது குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார்.

ஒரு காலத்தில் கியூபாவிற்குப் பிரதானமாக எண்ணெய் விநியோகம் செய்த நாடான வெனிசுலா, அண்மைக்காலமாக கியூபாவிற்கு எண்ணெய்யோ அல்லது பணமோ அனுப்பவில்லை எனக் குறிப்பிட்ட டிரம்ப், "கியூபா வெகு விரைவில் வீழ்ச்சியடையும்" என இந்த வாரம் தெரிவித்திருந்தார்.

டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலம் முழுவதும் வரி விதிப்பு அச்சுறுத்தல்களை ஒரு வெளியுறவுக் கொள்கை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்.

கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் கியூபா, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள வேண்டும் என டிரம்ப் பரிந்துரைத்த நிலையில், கியூபா மீது ஒப்பந்தமொன்றை திணிப்பதற்கு அமெரிக்காவிற்கு எவ்வித உரிமையும் இல்லை என கியூப ஜனாதிபதி இம்மாதம் தெரிவித்திருந்தார்.