கைப்பேசிக்கு அடிமையாகும் சிறுவர்கள் - வைத்தியர்கள் எச்சரிக்கை!


கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி உள்ளதன் காரணத்தால், சில பதின்ம வயது சிறுவர்கள் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தேசிய மனநல நிறுவனத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

"கொவிட் காலத்தில் சமூக ரீதியாக ஒன்றுகூட முடியாமல் போனதால் பாடசாலைக் கல்வி இணையவழியில் முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக சிறுவர்கள் தங்களையும் அறியாமல் கைத்தொலைபேசிகளை அதிகளவு பயன்படுத்துவதற்குப் பழகிக்கொண்டனர். தற்போது இது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவ்வாறான அடிமைப்பாடுகள் காரணமாக எமது கிளினிக்குகளில் சிறுவர்களை அனுமதிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.

அதேபோல், போதைப்பொருட்களுக்கு அடிமையானதன் காரணமாக மனநல பாதிப்புகளுக்கு உள்ளான பதின்ம வயது சிறுவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இவ்வாறான சிகிச்சைகளுக்காகக் கிளினிக்குகளுக்கு அனுப்பப்படுவதாகவும், இது சமூகத்தில் ஒரு பாரிய பிரச்சினையாக மாறி வருவதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.