திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள், 20,000 ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குறித்த பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா உணவகம் ஒன்றிற்கு, 2026 ஆம் ஆண்டிற்கான "தீயணைப்பு பாதுகாப்பு சான்றிதழை" (Fire Safety Certificate) வழங்குவதற்காக, குறித்த அதிகாரிகள் 40,000 ரூபாவை லஞ்சமாகக் கோரியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் அந்தத் தொகை 35,000 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் 10,000 ரூபாவை வங்கி கணக்கொன்றில் வைப்பிலிடுமாறும், மீதி 25,000 ரூபாவை நேரில் வழங்குமாறும் கோரியுள்ளனர்.
நேற்று முன்தினம் நேரில் வழங்கப்படவிருந்த பணத்தில், 20,000 ரூபாய் ரொக்கப்பணத்தைப் பெற்றுக்கொண்ட போதே திருகோணமலை மாநகர சபை மற்றும் தீயணைப்புப் பிரிவு வளாகத்தில் வைத்து இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 2026 மார்ச் 20 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












.jpeg)
