இன்று உயிர்த்த ஞாயிறு தினம்
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும்.
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.
இயேசு கிறிஸ்து உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்பதற்காக சிலுவையில் தனது உயிரைத் தியாகம் செய்து, மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்ததையே கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
இயேசுவின் துன்பப்படுதல், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து கிறிஸ்தவ மக்கள் பல்வேறு வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த 40 நாட்கள் தவக்காலமும் இன்றைய உயிர்த்த ஞாயிறு தினத்துடன் நிறைவடைகிறது.
இஸ்ரேலின் எருசலேம் நகரில் உள்ள கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட அவர், இன்றைய தினத்தில் உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்குக் காட்சியளித்ததாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய உயிர்த்த ஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு, "அல்லேலூயா" சனிக்கிழமை நள்ளிரவு ஆராதனைகள் நேற்று இரவு அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்றன. கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கலந்து கொண்ட விசேட ஆராதனை கொட்டாஞ்சேனை புனித லூசியா கதீட்ரலில் நடைபெற்றது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நடைபெறும் திருப்பலிகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசந்த பெர்னாண்டோ, இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முப்படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக கிறிஸ்தவ மக்கள் எவ்வித தேவையற்ற அச்சமுமின்றி தமது மத வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என அருட்தந்தை ஜூட் கிரிசந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.









.jpg)



