ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 1.6 இலட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் தோற்றினர்..


தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 160,000 க்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டிப் பரீட்சை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நாடு முழுவதும் உள்ள 1,048 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்டது.


இதற்காக அரச சேவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் 66,991 பேரும், ஏனைய விண்ணப்பதாரர்கள் 96,442 பேரும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

இதற்கு மேலதிகமாக, விசேட தேவையுடைய 323 விண்ணப்பதாரர்களுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வசதிகளை பரீட்சை திணைக்களம் வழங்கியிருந்தது.

கடந்த 2023ஆம் ஆண்டில், அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையொன்றை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டிருந்த போதிலும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 03 அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவிய வழக்கு நடவடிக்கை காரணமாக அந்தப் பரீட்சையை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய, அனைத்து வழக்கு நடவடிக்கைகளும் நிறைவடைந்ததன் பின்னர், நாடு முழுவதும் நிலவும் ஒட்டுமொத்த ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில், அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மட்டுமன்றி ஏனைய பட்டதாரிகளும் தோற்றக்கூடிய வகையில் இம்முறை பரீட்சை நடத்தப்பட்டது.