ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம் - விசேட பாதுகாப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுப்பு


ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நாளை புதன்கிழமை (20) மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

“கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு: மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம்” எனும் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதையடுத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா நாளை அபிவிருத்தி திட்டங்களை மக்களின் பாவனைக்காக கையளிக்கவுள்ளார்.

அதன் ஒரு கட்டமாக, 345 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிகசாலையாக அமைந்துள்ள மட்டக்களப்பு புதிய பொது நூலகத்தை காலை 9.30 மணி அளவில் திறந்துவைக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற உள்ளது.

பிற்பகல் 1.30 மணியளவில் முழு நாடும் ஒன்றாக தேசிய செயல்திட்ட நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்பினர், பிரஜா சக்தி உறுப்பினர், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர், பொதுமக்கள், என பலரும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.