மகிந்த ராஜபக்ஷ இளம் மனிதரைப் போல சுறுசுறுப்பாக உள்ளார் - பத்தரமுல்ல சீலரத்ன தேரர்



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எந்தவித உடல்நல பிரச்சினையும் இன்றி இளம் மனிதரைப் போல சுறுசுறுப்பாக உள்ளார். மூன்று தசாப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவர்களின் காலத்தில் யுத்த வெற்றி நினைவேந்தல்கள் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டன. ஆனால் தற்போதைய அநுர அரசாங்கத்திடம் அத்தகைய திட்டமிடலும் ஆற்றலும் இல்லை என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து நலம் விசாரித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மூன்று தசாப்தங்கள் நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவராக மகிந்த ராஜபக்ஷவை இந்த நாட்டின் மக்கள் நினைவுகூருகின்றனர். இன்று வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசியல்வாதிகள் சுதந்திரமாக சென்று தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்கும் மக்கள் அச்சமின்றி பயணிப்பதற்கும் காரணம் அக்காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களே.

யுத்த வெற்றி நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிடல் அவசியம். மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தலைவர்கள் இருந்த காலத்தில் மே 18 ஆம் திகதியை எவ்வாறு அனுசரிக்க வேண்டும் என்பது தொடர்பில் முன்கூட்டியே திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய அரசாங்கத்திடம் அத்தகைய ஆற்றல் இல்லை. தேசிய நிகழ்வுகளை நடத்துவதற்கும் உறுதியான நிர்வாக திறன் தேவைப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதிகளின் அனுபவங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க உள்ளிட்ட தலைவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது நாட்டிற்கு பயனளிக்கும். முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவையும் சந்தித்து நலம் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். யுத்தத்தில் பங்களித்த அனைவரின் சேவைகளும் மதிக்கப்பட வேண்டும். அதேவேளை பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதி என்பது பயங்கரவாதியே.

நாமல் ராஜபக்ஷ தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்கிறார். அவர் நல்ல செயல்களை மேற்கொண்டால் அவற்றை பாராட்ட தயக்கம் இல்லை. ஆனால் மக்களிடையே சென்று அவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு செயல்பட வேண்டும். சமூக ஊடகங்கள் ஊடாக சில புத்த பிக்குகள் மற்றும் மதத் தலைவர்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

குறிப்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் சமூக ஊடகங்களில் தீர்ப்பளிப்பது தவறான செயல். பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் அவதூறு பரப்பியவர்கள் சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். நாட்டை பாதுகாக்கவும் நல்ல தலைவர்களை உருவாக்கவும் பிக்குகள் முக்கிய பங்காற்றியுள்ளனர். மத அமைப்புகளை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.