நிந்தவூரில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் கைது


ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை (16) இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போது வீடொன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் கைதாகினர்.

கைதானவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 50 வயதுடையவர்கள், ஏற்கனவே குறித்த போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.