தொலைபேசி கம்பிகளை திருடிய சந்தேகநபர்கள் கைது..


 தொலைபேசிக் இணைப்பு கம்பிகளை வெட்டி திருடி அவற்றில் இருக்கும் செம்பை விற்றதற்காக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் டெலிகொம் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நோர்வூட் , மாஸ்கெலியா மற்றும் காசல்ரீ பகுதிகளில் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட தொலைபேசிக் கம்பிகளே இவ்வாறு வெட்டி வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள், ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் (16) சனிக்கிழமை அன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சந்தேக நபர்களைக் கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் இரவில் வாகனங்களில் வந்து, தொலைபேசிக் கம்பிகளை வெட்டி எரித்து, அவற்றில் இருந்த செம்பை விற்கும் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்துள்ளது என்று கூறினர்.

வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி இணைப்புகளை வழங்குவதற்காக ஹட்டனிலிருந்து நோர்வூட், மாஸ்கெலியா மற்றும் காசல்ரீ பகுதிகளுக்கு வழங்கபட்டிருந்த பெரிய தொலைபேசி இணைப்பு கம்பிகளை ஒரு குழு வெட்டி அகற்றியதாக ஹட்டன் டெலிக்கொம் நிறுவனத்தின் அதிகாரிகள் ஹட்டன் பொலிஸில் நிலையத்தில் புகார் ஒன்றினை பதிவு செய்திருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் தலைமையகத்தின் தலைமை ஆய்வாளர் மேற்பார்வையில், ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன் போது நோர்வூட் பகுதியில் சந்தேக நபர்களின் வீட்டில் சோதனை நடத்திய போது சந்தேக நபர்களால் வெட்டி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 4 மில்லியன் மதிப்புள்ள பல தொலைபேசி கம்பிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு திருடி வெட்டி எடுத்த தொலைபேசி கேபிள்களை உருக்கிப் பெற்ற ஒரு கிலோ செம்பை அவர்கள் ரூ. 2,500-க்கு விற்பனை செய்தமையுஉ தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும் சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.