நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பொலிஸ் பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்


பொலிஸ் திணைக்களத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக வழங்கப்படாமல் இழுபறி நிலையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகளை விரைவுபடுத்துவதற்குப் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவையை மேலும் தொழில்முறை சார்ந்த மற்றும் உயர்தரமிக்க ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மனங்களை எடுத்துள்ளது.

அதன்படி, பொலிஸ் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் சேவையில் தற்போது நிலவும் கடுமையான ஆள் பற்றாக்குறைக்குத் தீர்வாக, 10,000 புதிய அதிகாரிகளைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக விளக்கமளித்துள்ளார்.

நீண்டகாலமாகப் பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் காணப்பட்ட பதவி உயர்வு தொடர்பான அதிருப்திகளுக்கு இந்த நடவடிக்கை ஒரு முக்கிய தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.